வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம்

வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அனைவருக்கும் சாத்தியப்படுமா என்றால் நிச்சயம் சாத்தியப்படும். ஒரு சிறு காலி இடம் கிடைத்தால் கூட போதும் அதை வைத்து நாம் நமக்கு தேவையான காய் கனிகளை விளைவிக்க முடியும். அதுவும் குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல். கீழ் காணும் பட்டியல் வீட்டுத்தோட்டத்தால் என்ன என்ன நன்மைகள் என்பதை விளக்குகின்றது.

  • இயற்கையான காய்கறிகள்
  • மிகவும் குறைந்த செலவு
  • உயிர் கொல்லி பூச்சி மருந்துகளிடம் இருந்து விடுதலை
  • வாங்க செல்லும் நேரம் மிச்சம்
  • காலி இடத்தையும் உபயோக படுத்துதல்

நாம் நமது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை உபயோகப்படுத்தும் போது நமக்கு ஏற்படும் மனத்திருப்தி அளவற்றது.

வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்க என்ன தேவை படும்?

வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்க நமக்கு அதிக செலவு ஆகாது. முதலில் செடி வளர தேவை படுவது மண் தான். எனவே நமது இடம் மண்ணை கொட்டுவதற்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நமது காலி இடம் மண் தரை என்றால் நாம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இல்லை. அல்லது காலி இடம் சிமென்ட் தரை என்றால் நாம் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் நாம் நேரிடையாக மண்ணை சிமென்ட் தரையில் கொட்டக்கூடாது. அதுவும் மொட்டை மாடி என்றால் மிகவும் ஆபத்து. அப்படி நாம் கொட்டி பயிரிடும் போது ஊற்றப்படும் நீர் தரையில் இறங்கி பல விளைவுகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க நாம் மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்துவது சிறந்தது.

நகரங்களில் மண்தொட்டிகள் கிடைப்பது சிரமம் அதற்கு மாற்றாக HDPE GROW BAGS எனப்படும் பிளாஸ்டிக் பைகள் சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்குதக்கவாறு கிடைக்கிறது.மேலும் மண் கிடைப்பது சிரமம் ஆதலால் அதற்கும் மாற்றாக தென்னைநார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்துதல் எளிதானது.எடை குறைவானது.தென்னைநார் கழிவு நன்கு அமுக்கப்பட்டு அதனைச்சேர்த்தே HDPE GROW BAGS சந்தைகளில் கிடைக்கிறது.அதனை பயன்படுத்தலாம்.

தேவையானவை

  • காலி இடம்
  • நிலம் அல்லது மண்
  • மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை (தேவைப்பட்டால்)
  • கொஞ்சம் தண்ணீர்(வீணாகும் நீரையும் பயன்படுத்தலாம்
  • வீட்டு குப்பைகள்(உரமாக பயன்படுத்தலாம்)
  • கொஞ்சம் விதைகள்(சில விதைகள் நமக்கு சமையலறை கழிவுகளிலேயே கிடைக்கும்)
  • தினமும் கொஞ்சம் நேரம்(பராமரிக்க)

இவைகளை வைத்துக்கொண்டே நாம் சிறந்த முறையில் பயிர் செய்யலாம்.

எந்த வகையான காய்கறிகளை விளைவிக்க முடியும்?

வீட்டுத்தோட்டம் என்பது சிறிய அளவிலான விவசாயம் போன்றது. எனவே நாம் அணைத்து வகையான பயிர்களையும் நம்மால் விளைவிக்க முடியும். உதாரணமாக கீழ் கண்ட காய்கறிகளை நாம் எளிதாக விளைவிக்க முடியும்.

  • மிளகாய்
  • தக்காளி
  • பாகற்காய்
  • புடலை
  • பீர்கன்காய்
  • அவரைக்காய்
  • கீரைகள்

இவற்றினை விளைவிக்கும் முறைகளை நாம் பின்வரும் பதிவுகளில் காண்போம்.

Leave a Reply