காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை திங்கள்கிழமை (2020-07-20) வெளியிட்ட அறிவிப்பு:- தோட்டக்கலை பயிா்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகா்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக அவற்றைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும். ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், காய்கறி பயிா்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவுச் செடிகளின் விலைப் பட்டியல், கிராம நிா்வாக அலுவலா் அளித்த அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் விவசாயிகளின் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சமாக 2 ஹெக்டோ வரை ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply