வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

வேப்பிலை, வேப்பம் பருப்பு ஆகியவற்றிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரித்து, பயிர்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகள் கற்றுணர்ந்து பயன்பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

http://upload.wikimedia.org/wikibooks/ta/2/2f/Veppa_ilai.jpg

வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம் பருப்பைப் பொடியாக்க வேண்டும். இதை காடாத்துணியில் மூட்டையாக கட்டி சுமார் 10 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இக் கரைசலை வடிகட்டினால் 6 முதல் 7 லிட்டர் வேப்பவிதைக் கரைசல் கிடைக்கும்.

இதை பயிருக்குத் தெளிக்கும்போது 10 லிட்டர் நீரில் 500 முதல் 1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 முதல் 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டர் – 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது.

ஓர் ஏக்கர் பயிருக்கு 60 லிட்டர் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானைப் பயன்படுத்தினால் 110 லிட்டர் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

 

வேப்பிலைக் கரைசல்: ஓர் ஏக்கர் பயிருக்குத் தெளிக்க 10 முதல் 12 கிலோ இலை தேவைப்படும். இந்த இலையை ஒன்றிரண்டாக இடித்து காடாத்துணியில் மூட்டையாகக் கட்ட வேண்டும். பின்னர், அந்த மூட்டையை 20 முதல் 24 லிட்டர் வரை தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

பின்னர், இக் கரைசலை வடிகட்ட வேண்டும். அப்போது 15 முதல் 17 லிட்டர் கரைசல் கிடைக்கும். ஒரு டேங்குக்கு (10 லிட்டர் அளவு) 500 – 1,000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 – 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு டேங்க் கரைசலுடன் 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டருக்கு 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஓர் ஏக்கர் பயிருக்கு 10 டேங்க் வரை தெளிக்க வேண்டும். இக் கரைசல் சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

 

வேப்பம் பிண்ணாக்கு:வேப்பம் பிண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் பிண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிர்களுக்கு பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.

2 thoughts on “வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

    1. admin Post author

      வணக்கம்
      வேம்புகரைசலை கள்ளிப்பூச்சி, அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
      நன்றி
      EnVivasayam Team

Leave a Reply