தேக்கு மரம் வளர்ப்பு மற்றும் லாபம் குறித்த தகவல்

உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இதன் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” ஆகும். இது “வெர்பினேசியே” தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் ‘டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம்” என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மரம் ஓங்கி வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.

தேக்கு பயிரிட ஏற்ற நிலம் :
இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியல் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது. இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு ஏற்றதல்ல. இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கரநாடகம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் கூட வளர்கிறது. கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது.
மரத்தின் சிறப்பியல்புகள் :
1. தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது.
2. மேலும் இம்மரம் “ஒளி விரும்பி” (Light Demand-er) ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.
3. தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும் 90செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.
பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :
தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்க தொடங்கினாலும் நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன்-செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விதைகள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும். 20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.
விதை சேகரம் :

நாற்றுகள் உற்பத்திக்கு தேக்கு வதைகளை 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய மரங்களிலிருந்து சேகரம் செய்வது நன்று. மேலும் பக்க கிளைகள் அதிகம் இல்லாத நேராக, உயரமாக வளர்ந்த, நோய்தாக்காத மற்றும் நல்ல பருமனமான தேக்கு மரங்களிலிருந்து விதைகள் சேகரம் செய்ய வேண்டும். இவ்வாறு விதைகள் சேகரம் செய்து தோட்டம் உற்பத்தி செய்தால் நல்ல தரமான மரங்கள் கிடைக்கும்.

விதை நேர்த்தி :
தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதை உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும். இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப் பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வது மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.நாற்றுகள் உற்பத்தி :

தேக்கு நாற்றுகள் பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்தும், தேக்கு நாற்றுக்குச்சிகள் மூலமும் தோட்டம் எழுப்பலாம். தேக்கு நாற்றுக்குச்சிகளை தயாரிக்கத் தேவையான தாய்பாத்தி 10மீX1மீX0.3மீ அளவுள்ள மேட்டுப்பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீத மணலும் 25 சதவீத செம்மண்ணும் 25 சதவீத வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும். தாய்பாத்தியின் மேல்சுமார் ஒரு அங்குல கனத்தில் குறு மணலை பரப்ப வேண்டும். இந்த மண்ண்ல் தொழுஉரமோ, சாண எருவோ கலக்க கூடாது. அவ்வாறு கலந்தால் வேர்புழுக்கள் தோன்றி நாற்றுக்கள் சேதமாகும். பூச்சிக்கொல்லிகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உயிர் பூச்சிக்கொல்லியான மைக்கார் (Mycar formites) அல்லது வேம்பு பாலை தாய்பாத்தியில் தெளித்து பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்தியில் 8 கிலோ என்ற அளவில் தேக்கு விதைகளை விதைக்க வேண்டும். தேக்கு விதைகளுக்கு இடையே 2 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த பின்பு தேக்கு விதை கனத்திற்கு குறுமணலை விதைகள் மேல் ஒரே சீராக பரப்ப வேண்டும். அதன்மேல் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி மூடி விட வேண்டும். தினமும் காலை மாலை இருமுறை “பூவாளி மூலம் தாய்பாத்திக்கு 15 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும்”. பின்பு தினமும் ஒரு முறை வீதம் 30 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் சுமார் 10 நாட்களிலிருந்து 15 நாட்களில் முளைக்க தொடங்கி 30-35 நாட்கள்வரை முளைத்து கொண்டிருக்கும். இந்நிலையில் வைக்கோல் மற்றும் தென்னங்கீற்றுகளை அகற்றி விட வேண்டும். தாய்பாத்தியில் மூன்று மாதத்திற்கு பின்பு பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை கைத்தொளிப்பான் மூலம் நாற்றங்கால் நன்கு வளர்ச்சியடையும். மேலும் நாற்றுகள் பூச்சிகளால் தாக்கப்படாமலிருக்க தகசாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து கை தெளிப்பான் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

நாற்றுக்குச்சிகள் மூலம் தோட்டம் உற்பத்தி :

நாற்றுக்குச்சிகள் 8 முதல் 10 வரை தாய்பாத்தியில் வளர்ந்து அதே சமயத்தில் பென்சில் பருமனுள்ள தேக்கு நாற்றுக்களிலிருந்து தயார் செய்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். தேக்கு நடவு செய்யப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து களைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். சம பகுதியாக இருப்பின் நடவு செய்ய வேண்டிய இடத்தை உழுதுவிடவேண்டும். பின்னர் தென்மேற்கு பருவமழையின் ஆரம்பத்தில் 1 ஏக்கருக்கு 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவுள்ள 1000 குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் நன்கு காய்ந்த பின் மக்கிய 2 கிலோ தொழு உரத்துடன் வண்டல் மண் மற்றும் செம்மண் சமமாக கலந்து குழியில் 95 சதவீதம் நிரப்ப வேண்டு்ம். மழைக்காலம் ஆரம்பித்தும் குழிகளில் உள்ள எருக்கலவை நன்கு ஈரமாகும். இந்நிலையில் கடப்பாரையால் குழியின் மையப் பகுதியில் துவாரம் இட்டு அவைகளில் தேக்கு நாற்றுக்குச்சிகளை நட்டு குச்சி சேதமடையாமல் மேல் மண்ணை கொண்டு அணைத்து காற்று புகாமல் இறுக்கமாக கைகளால் கெட்டிப்படுத்த வேண்டும். அதே சமயம் நாற்றுக்குச்சிகளின் கழுத்துப் பகுதியும் குழியின் மேல்மட்டமும் தரை மட்டத்திற்கு இருக்குமாறும் குச்சியின் மேல் பகுதி 2செ.மீ. அளவிற்கு தரை மட்டத்திற்கு மேலே இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் குச்சியின் மேல் பகுதியில் மண் மூடிவிட்டால் துளிர்வருவது தடைப்படும். நாற்றுக் குச்சிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 15 நாட்களுக்கு போதுமான அளவு நீர் விடவேண்டும். பின்னர் வாரத்திற்கு இருமுறை வீதம் மூன்று மாதம் நீர் விடவேண்டும். மழைபெய்தால் நீர்விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடப்பட்ட நாற்றுக்குச்சிகள் ஏழு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். நாற்றுக்குச்சிகள் ஒன்றுக்கு மேல் துளிர்கள் வருமாயின் திடமான ஒரு துளிரை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை நடவு செய்த இரண்டு மாதம் கழித்து அகற்றிவிடவேண்டும். பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செடியை சுற்று 15செ.மீ ஆழம்வரை கொத்தி களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடையும்.

பை நாற்றுக்கள் உற்பத்தி செய்தல் :
செம்மண், வண்டல்மண், மணல் மற்றும் நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியே சலித்து சம அளவில் கலந்து (16X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை (10X1) மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி விடவேண்டும். பின்பு தாய்பாத்தியிலிருந்து 6 இளைகளுடன் கூடிய தேக்கு இளங்கன்றுகளை பிடுங்கி பாலித்தீன்பைகளில் ஒரு பைக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும். மேலும் நாற்றுக்குச்சிகளை தயார் செய்து பாலித்தீன் பைகளில் நட்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். பைச்செடிகளுக்கு முதல் 10 நாட்களுக்கு தினம் இரு வேளையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒன்றுவிட்டு ஒருநாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும்.பின்பு வாரத்திற்கு இரண்டு நாள் நீர் ஊற்றினால் போதுமானது. நான்கு மாத காலத்தில் சுமார் 60-75 செ.மீ உயரத்திற்கு நாற்றுக்கள் வளர்ந்திருக்கும். இதுவே நடுவதற்கு தகுதியான நாற்றாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டுடிய இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நிலம் சமமாக இருப்பின் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் முதன் மழையில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சமபங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழிஉரம் அல்லது 2 கிலோ தொழுஉரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவிற்கு நிரப்ப வேண்டும். ஜுன்-ஜுலை மாதங்களில் பருவ மழைகிடைத்தவுடன் பாலித்தீன் பைகளை அகற்றிவிட்டு குழிகளில் தாய்மண் கட்டி உடையாதவாறு செடிகளை நடவு செய்ய வேண்டும். குழிகளின் மீதிப்பகுதியை சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு மூடி செடியை சுற்றி இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்து விடவேண்டும். செடியை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும், நிர்வாகத்தலும் :

நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள், தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தசகாவ்யா அல்லது வேம்புபால் அல்லது நீம் அசால் அல்லது புகையிலை வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டருக்கு 30 மி.லி. வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தோட்ட பராமரிப்பு : (Maintenance of Plantation)
தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15 செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வுண்டும். செடிகள் நன்கு வளர மாதம் இருமுறை நீர்விடுவது அவசியமாகும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை களை கொத்தி தொழுஉரம் இடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தேக்கு கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.

வரப்பு நடவு :

விவசாய நிலத்தில் வரப்புபகுதியில் 2மீX2மீ இடைவெளியில் தேக்கு குச்சி நாற்றுகள் அல்லது பை நாற்றுக்களை மேற்கானும் செய்முறைப்படி வரப்பு நடவு செய்யலாம். மேலும் பராமரிப்பு பணியும் அவ்வாறே மேற்கொள்ள வேண்டும். வரப்பு நடவுமுறைப்படி நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தோப்பு முறைப்படி நடப்பட்ட மரக்கன்றுகளை விட நன்கு வளரும். ஏனெனில் தேக்கு மரக்கன்றுகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டம் மற்றும் சத்துக்களும் கிடைக்கும்.

தோட்டம் எழுப்புவதற்கான செலவு :
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 1000 தேக்கு மரக்கன்றுகள் நடப்படும். இதற்கான சாகுபடி பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.

பக்ககிளை களை அகற்றுதல் : (Pruning)

தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பருமனாகவும், நேராகவும், பக்ககிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை மரத்திற்கு சேதாரம் இல்லாமல் கழித்து விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் பக்ககிளைகளை வெட்டி அகற்றிவிட வேண்டும்.

5ம் ஆண்டில் இடை வரிசைகளை கலைத்தல் :
மேலும் தேக்கு மரங்கள் அடர்ந்த வளர்ந்து வரும் நிலையில் நட்ட 5ம் ஆண்டில் இடை வரிசைகளில் உள்ள மரங்களை நீக்கி மீதி மரங்கள் நல்ல பருமனாகி வளர வழி செய்ய வேண்டும். அதாவது முதல் 5வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது மூலைவிட்ட வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒருவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2மீX2மீ இடைவெளியில் தேக்கு மரக்கன்றுகளை நடும்பொழுது ஏக்கருக்கு 1000 மரங்கள் இருக்கும். இதில் 500 மரங்கள் வெட்டி எடுக்க வேண்டும்.

தேக்கு மரம் கலைத்தல் முதல் வருவாய் :
5ம் ஆண்டில் 500 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ. 100 – வீதம் 500 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 50,000/- ஆகும்.

12 ஆம் ஆண்டில் இடைவரிசைகளை கலைத்தல் :

அடுத்த 12ம் ஆண்டில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்து விட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் மீதம் இருக்கும் .

தேக்கு மரம் கலைத்தல் இரண்டாம் வருவாய் :
12-ம் ஆண்டில் 250 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ.1000 வீதம் 250 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 2,50,000/- ஆகும்.
மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 30 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும். 30ம் ஆண்டில் 1 ஏக்கரில் 250 தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கும்.

வேளாண்காடு வளர்ப்பு :

தேக்கு மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு கொள்ளு மற்றும் காய்கறிகள் போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம். தென்னை மற்றும் வாழை தோப்புகளின் வரப்போரமாக தேக்கு மரக்கன்றுகளை நட்டு சாகுபடி செய்யலாம்.

தேக்கு மரத்தின் பயன்பாடு :
தேக்கு மரம் ஒரு உயர்தர மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம். மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்தல், கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.

இன்றைய பொருளாதார மதிப்பு :
10 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் வரை தேக்கு மரத்தின் இன்றைய சந்தை கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.

undefined

தேக்கு மரத்தின் சுற்றளவு மற்றும் பருமன் சாதாரண தோட்டங்களில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. தேக்கு மரதோட்டத்தை நீர்பாய்ச்சி பக்க கிளைகளை முறையாக அப்புறப்படுத்தி மரங்களை 5 மற்றும் 12 ஆம் ஆண்டுகளில் கலைத்து நன்கு பராமரிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் பெறலாம்.

மேலும் தகவலுக்கு :
தமிழ்நாடு அரசு வனத்துறை
வனவியல் விரிவாக்கப் பிரிவு
சென்னை – 600 048.