சொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி


கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் கடந்து விட்டது. தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. சமுதாயத்தின் பெரிய பொருளாதார ரீதியாக கரும்பு பயிர் உள்ளது.
“கரும்பு சாகுபடியில் இடுபொருள் மற்றும் நீர்பாசனம் போன்றவற்றை குறைத்து மகசூல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட “நீடித்த நவீன கரும்பு சாகுபடி’ என்ற புதிய தொழில் நுட்பத்தினை தேசிய வேளாண்மைத்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதை “நபார்டு’ வங்கி நிதி உதவியில் சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையின் “நீர் நுட்ப மையம்’ மூலம் செயல்படுத்தி வருகிறது. இம்முறையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயி முத்துக்கவுண்டர் வயலில் “கிரேஸி கரும்பு நாற்று’ பண்ணையில் கரும்பு நாற்றுகள் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலாளர் கிரேஸி விமலா பாய் கூறியதாவது: நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி. இந்த முறையில் விளைச்சலை அதிகரிப்பதோடு நீர்நிலை ஆதாரங்கள் முற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இத்தொழில் நுட்பம் இருக்கிறது. நீடித்த நவீன கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு சாகுபடி முறை.
சாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய வேண்டுமானால் நான்கு டன்கள் கரும்பு தேவைப்படும். இன்றைய கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,250. இதன்படி நான்கு டன்களுக்கு ரூ.10,200 தேவை. ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகள் நடும்பொழுது ஒரு ஏக்கருக்கு சுமார் 5000 நாற்றுகள் போதுமானது. நாற்று ஒன்றின் விலை ரூ.1.40. இதன்படி 5,000 நாற்றுகளுக்கு ரூ.7,000 போதும். மேலும் 30 நாட்கள் வயதுள்ள நாற்றுகளாக நடுகின்றபடியால் ஒரு மாதத்திற்குண்டான பயிர் பராமரிப்பு செலவு குறைவதோடு கரும்பு வெட்டு மாதமும் ஒரு மாத்திற்கு முன்னரே வருகிறது.
கரும்பினை நேரடியாக அப்படியே வயலில் நடும்பொழுது நடும் அனைத்து பருக்களும் அப்படியே முளைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் நாற்றுகளாக நடும் பொழுது அனைத்து நாற்றுகளும் முளைப்புத்திறன் கொண்டதாக உள்ளது. கரும்பு கரணையாக நடுகின்றபொழுது உண்டாகும் கூடுதல் பணியாளர்களை விட நாற்றுகளாக நடும் பொழுது குறைவான பணியாளர்களே போதும். ஒரு ஏக்கருக்குண்டான 5,000 நாற்றுகளை ஆறு நபர்கள் நான்கு மணி நேரத்தில் நடவு செய்து விடலாம். மேலும் பருக்கள் அனைத்தும் முறைப்படி விதை நேர்த்தி செய்து நாற்றுகளாக்கப்படுவதால் கரும்பு பயிரில் நோய் தாக்குதலானது பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகளாக நட்ட வயலில் ஒரு ஏக்கருக்கு கரும்பு மகசூலானது சுமார் 70 டன்கள் வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிக்கு அதிக லாபம் கிடைப்பதோடு சர்க்கரை ஆலைகளுக்கும் சர்க்கரை கட்டுமானம் அதிகம் கிடைத்து விவசாயிகளுக்கு கரும்புக்கு அதிக விலை கொடுக்க வழிவகை செய்கிறது. நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், நாற்றுக்கும் தமிழக அரசின் மானியம் உண்டு. முடிந்த நடவு பருவத்தில் 100 சதவீத மானியத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் நாற்றுகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் அறிவியல் மையத்தின் நீர்நுட்ப மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம் என்றார்.
தொடர்புக்கு 88705 66337 ல் அழுத்தலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை.

Leave a Reply