சாம்பல் பூசணி பயிரிடும் முறை

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் நன்கு வளரும். மானாவாரியில் பயிர் செய்ய களிமண் கலந்த நிலம் சிறந்தது. சாம்பல் பூசணியின் வளர்ச்சிக்கு அதிக குளிரில்லாத ஓரளவு வெப்பமான பருவநிலை மிகவும் உகந்தது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத் தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.

பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி

விதையும் விதைப்பும்

விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோ விதைகள், விதைகளை விதைக்கும் முன்னர், ஒரு கிலோ விதைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பின்னர் ஆறு நாட்கள் வைத்திருந்து பிறகு விதைக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல் : நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவு செய்தபின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலமுள்ள நீண்ட வாய்க்கால்கள் அமைக்கவேண்டும். இந்த வாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ நீள, அகல, ஆழ அளவு குழிகளை எடுக்கவேண்டும்.

இடைவெளி : 2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை இரண்டு மீட்டர் செடிக்குச்செடி 1.5 மீட்டர்)

விதைப்பு : ஒரு குழிக்கு 3-6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டு மற்ற செடிகளை நீக்கிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு எரு மற்றும் கலப்பு உரம் (6:12:12) தழை:மணி:சாம்பல் சத்து), 100 கிராம் இட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும். 30 நாட்கள் கழித்து ஒரு குழிக்கு 10 கிராம் யூரியா என்ற அளவில் மேலுரம் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

பூசணி விதைகளை விதைப்பதற்கு முன் குழிகளுக்கு நீர் பாய்ச்சவேண்டும். விதை விதைத்த அடுத்த நாள் கண்டிப்பாக நீர் ஊற்றவேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் ஊற்றவேண்டும். முளைப்புத் திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

செடிகளைச் சுற்றி 15 நாட்களுக்கு ஒரு முறை களைக்கொத்தினால் களை நீக்கம் செய்யவேண்டும். கொடிகளை வாய்க்காலில் படரவிடாமல் அவ்வப்போது எடுத்து இரண்டு வாய்க்கால்களின் இடைப்பட்ட நிலப்பரப்பில் படரச்செய்யவேண்டும். விதைத்த 30ம் நாள் குழி ஒன்றுக்கு 10 கிராம் யூரியா என்ற அளவில் மேலுரம் இடவேண்டும்.

பயிர் ஊக்கி தெளித்தல் : விளைச்சல் அதிகரிக்க விதைத் 15ம் நாளில் 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி என்ற அளவில் எதிரில் என்னும் வளர்ச்சி ஊக்கியினை நான்கு முறை ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவேண்டும். இதனால் கொடிகளில் பெண் பூக்கள் அதிகம் தோன்றி, அதிகக் காய்கள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வண்டுகள்

பூசணியில் தோன்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 1 மில்லி மருந்து இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

பழ ஈ

பழ ஈக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். பழ ஈ தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்கவேண்டும். பழ ஈக்களின் தாக்குதல் கோடைக்காலத்தில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாவும் காணப்படும். எனவே இதை அனுசரித்து பயிர் செய்யவேண்டும்.
எந்தக்காரணத்தைக் கொண்டும், டிடிசி, பிஎச்சி, கந்தகம் மற்றும் தாமிரம் மையமாக்கொண்ட பூச்சி, பூசணக் கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது. இது கொடிக்கு ஆபத்தை விளைவிக்கும்.

நோய்கள் :
சாம்பல்  நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.

அறுவடை

காய்கள் முற்றிய நிலையை காய்களின் மேல் பரப்பில் உருவாகும் சாம்பல் பொருட்கள் உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டு பிடிக்கலாம். பூசணி விதைத்த 90ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம். சாதாரண வெப்பநிலையில் காய்களை நல்ல காற்றோட்டமான அறைகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டு சேமிப்பதன் மூலம் சுமார் 4லிருந்து 5 மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.

இரகங்கள் : கோ 1 மற்றும் கோ 2

Leave a Reply